மனக் குறுகுறுப்புடன் மகளிர் தின வாழ்த்துக்கள்

பெற்றுப் போட்டவளின் மனத்தைச்
சுட்டுப் பொசுக்கிய பல கணங்கள்

நட்பு பாராட்டிய தோழிகளை புறத்தே
நயமின்றி நக்கலடித்த கணங்கள்

அலுவலகப் பெண் ஊழியர்கள்
அழும் வகையில் நடந்துகொண்ட கணங்கள்

கட்டியவளின் மீது கண்மூடிக்
கை நீட்டிய கணங்கள்

பெற்ற மகளை உள்ளத்தில்
பாரமாய்க் குமுறிய கணங்கள்

தலை முறைகள் ரத்தத்தில்
தைத்து விட்டுப் போன ஆண் என்ற அகம்பாவம்

அத்தனையும் தாண்டி அன்போடு
மகளிர் தின வாழ்த்துச் சொல்ல
மனம் குறுகுறுக்கிறது

மாற விரும்பும் மனது
கொஞ்சம் உள்ளம் மறைத்து
நடிக்க முயன்றால் காறித் துப்பும் மனசாட்சி

இருந்தாலும் மன்னியுங்கள் மகளிரே
மகளிர் தின வாழ்த்துக்கள்.........

நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?

தறிகெட்ட வேகத்தில் பைக்கிலும்
தூரே தளர்ந்து விழும் பூவிதழில்
துல்லியமாய் உன் முகம்

கணினியின் ஒன்று பூஜ்ஜியம்
ஓட்டங்களுக்கு இடையில்
உன் இமைகள் கவிழ்வது துல்லியமாய்

செல்போன் தகவல் சிதறிய
அலைகளுக்கு நடுவில்
உன் அலையாடும் கூந்தல் துல்லியமாய்

பிக்சல்கள் ரங்கோலி விளையாடும்
படத் தொகுப்பு ஆச்சர்யங்களில்
உன் பட்டுக் கன்னங்கள் துல்லியமாய்

வேறெதுவும் தெரியவில்லை ஆதலால்
அணுக்களின் தொகுப்பு இவ்வுலகம்
என்ற அத்வைதம் புரிந்தது......

காமம் செத்துக் காதல் நிறைந்ததால்
நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?