சுவிஸ் வங்கிகள் திவாலானால் அரசியல்வாதிகள் என்ன ஆவார்கள்?

நெருப்பு என்றால் நாக்கு வெந்து விடுமா என்று கேட்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாக்கு என்ன உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வெந்து போய்விடும் போலிருக்கிறது.. அதுவும் அமெரிக்காவின் லேஹ்மான் பிரதர்ஸ், எ.என்.ஜி போன்றவை ஒரே இரவில் திவாலான விஷயங்களையும்..நம்மூர் சத்யம் ராஜுஅடித்த ஊழல் செஞ்சுரி போன்ற விஷயங்களையும் நினைத்தால் பொருளாதார உலகில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது.....

நமக்கு மட்டும் அடித்துக் கொண்டால் போதுமா.. அனைவரையும் ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பிரஷர் எகிரட்டுமே என்ற நல்லெண்ணத்தினால் இந்தக் கற்பனைக் கட்டுரை.....

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எத்தனை ஆழத்திற்கு வேர்விட்டிருக்கிறது என்பது இன்னும் உறுதிபடத் தெரியாத நிலையில் ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்தத்தாக்குதல் மிக அதிக அளவில் இருந்து அதைத் தாக்குப் பிடிக்க கறுப்புப் பணங்கள் கோடிக்கணக்கான பில்லியன் டாலர்கள் அளவில் போட்டுவைக்கப் பட்டிருக்கும் வங்கிகள் மற்றும் அது போன்ற பிற முதலீட்டு நிறுவனங்கள் இரவோடிரவாக திவால் நோடீஸ் கொடுத்துவிட்டு ஜூட் விட்டால் அவற்றில் பல ஆயிரம் கோடிக் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் இந்திய பண முதலைகள் என்ன செய்வார்கள்?..திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்காது?

குறிப்பாக துட்டு அடிக்கவே அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடிகளை அங்கே பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்?.... யாரிடம் போய் பஞ்சாயத்துப் பண்ணுவார்கள்?...இது போன்ற சூழ்நிலையில் சட்ட ரீதியான அணுகுமுறைகள் ஏதாவது இருக்கிறதா?..அப்படியே இருந்தாலும் கள்ளத் துட்டிற்கு எங்கே போய் கேஸ் போடுவார்கள்?...எப்படி இந்திய அரசை நடவடிக்கை எடுக்க வைப்பார்கள்?..உங்களில் யாருக்காவது இதற்கான தகவல்கள் இருக்கிறதா?.....ஊதற சங்கை ஊதிட்டேன்...நடந்தப்புறம் நம்மைச் சபித்து பயன் இல்லை!!!!

சென்னையில் பதிவர்கள் சந்திப்பு

நான் வலைப்பதிவுலகில் நுழைந்தே நான்கு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் கூட தொடர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன் (பின்னூட்டங்கள் கிடைக்காவிட்டால் கூட!!) . பதிவர்கள் சந்திப்பிற்காக கிழக்கு பதிப்பக மாடியில் நுழைந்தபோது கோவி.கண்ணன் வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பத்ரி, லக்கிலுக், டாக்டர் ப்ரூனோ , நரசிம் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

வட்டவடிவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தன. பேச்சு முதலில் ராதாகிருஷ்ணனின் நாடக அனுபவங்களில் இருந்து தொடங்கியது. நாடகம் வழக்கொழிந்து கொண்டிருப்பதற்கான காரணத்தை அலசியபோது...நாடகங்களை திரைப்படங்களாக எடுத்தது ஒரு காலம்...பின்னால் வந்த பாரதிராஜா போன்றவர்கள் திரைப்படங்களை கிராமங்களுக்கே கொண்டு சென்று இயல்பாக திரைப்படம் எடுக்கும் வித்தையைக் காட்டத் தொடங்கியபின் திரைப்படத்தில் கூட சம்பிரதாயமாக வரும் காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்ட விதம் ரசிகர்கள் எந்த அளவிற்கு நாடகங்களை விட்டு விலகிப் போய்விட்டார்கள் என்பதற்கு சாட்சி என்று என் கருத்தை சொன்னேன்.

பேச்சு சுனாமி பற்றி திரும்பியது. பத்ரி சுனாமி தகவல் கிடைத்தவுடன் போட்டது போட்டபடி அவர்களுக்கு மருத்துவ சேவை செய்ய ஓடிய மருத்துவர்களை பாராட்டினார்.

வாசகர் கோவில்பட்டி அருண் தன் வேலை நேற்றே முடிந்துபோய்க் கூட இந்த சந்திப்பிற்காக சென்னையில் இருந்திருக்கிறார்...செல்போன் தயாரிப்பில் நோக்கியாவையும் உள்ளே விட்டு.... சீனத் தயாரிப்புகளையும் மார்க்கெட்டில் குவிக்கும் வியாபார விளையாட்டுகளை விலாவாரியாக கிழித்துப் போட்டார். லட்சுமி, பாலபாரதி அவர் கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை....

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்த முறை (செலவுக்கு நிறைய காசு இருந்து கூட) சரியாக விளம்பரம் செய்யவில்லை என்று பத்ரி குறைப்பட்டார்...அதிஷா சாக்லேட் விநியோகம் செய்தார் (நல்ல பாரின் சாக்லேட், வாயில் கரைந்தது) குளிர்பானங்களும் விநியோகிக்கப்பட்டது..

சென்னை சங்கமம் பற்றிய விவாதத்தில் சென்னை கர்நாடக இசை விழாக்களைப் போல இந்த கிராமிய விழாவிற்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெரும் அளவில் ஸ்பொன்சர் செய்ய வேண்டும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன்..

இஸ்மாயில் சுனாமி முன்னெச்சரிக்கை முறை பற்றியும், மத நல்லிணக்கத்தைப் பற்றியும் நியாயமான கவலைப்பட்டார்....கொஞ்சம் இஸ்ரேல் விவகாரமும் சீண்டிப் பார்க்கப்பட்டது...

பாக் டு ஸ்கொயர் ஒன் என்பது போல் திரைப்பட விவாதம் தொடங்கியது.. இயக்குனர் சண்முகப்பிரியன், கேபிள் ஷங்கர், அக்கிநிப்பார்வை, வெண்பூ, அசன் அலி போன்றவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள்..என்னுடைய கொழும்பு திரைப்பட வர்த்தக அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன்...

சந்திப்பு இனிதே நிறைவுற அனைவரும் எல்டாம்ஸ் தெரு முனையில் தேநீர் பருகினோம்..புரூனோ சத்யம் ராஜுவின் கேப்மாறித் தனங்களைப் புட்டு வைத்தார்... அனைவரும் கை குலுக்கி விடைபெற்றோம்...மனத்துக்கு ஆனந்தமும், நிம்மதியும் தந்த அருமையான சந்திப்பு...அனைவருக்கும் நன்றி.....
(நண்பர்கள் நிறைய புகைப்படம் எடுத்தார்கள்...அவர்களது வலைப்பக்கங்களில் பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன்)

பிக் பாங்கும் அபிராமி அந்தாதியும்.....

பிக் பாங் அல்லது பெருவெடிப்பு சித்தாந்தம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த பிரபஞ்சம் தோன்றியதைப் பற்றிய பல்வேறு சித்தாந்தங்கள் இருந்த போதிலும் இன்றைய தேதியில் விஞ்ஞானிகளால் பெருமளவுக்கு ஆதரவு பெற்ற சித்தாந்தம் பெருவெடிப்பு சித்தாந்தம் தான்.......

அதாவது பெரும் வெட்டவெளி இருளுக்குள் இருந்து ஒளி ஒரு பெரு வெடிப்பாக கதிரியக்கமாக வெளிப்பட்டு அது பல்கிப் பெருகி பின் அணுவாக,,, செல்லாக ;;;;பின் உயிராகவும் பல பொருள்களாகவும் இந்த முழுப் பிரபஞ்சமாகவும் விரிந்தது என்று பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குகிறது இச்சித்தாந்தம்..

இதை அப்படியே வரி பிசகாமல் கருத்துப் பிசகாமல் தருகிறது அபிராமிபட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி..பாடலைக் கவனிப்போம்

"கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும் ஒளியே
ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன்
அறிவின்அளவிற்கு அளவானது அதிசயமே"

கிளர்ந்தொளிரும் ஒளி = கதிரியக்க வெடிப்பு
ஒளிரும் ஒளிக்கிடமே=வெட்டவெளி
எண்ணில் ஒன்றுமில்லா வெளியே=சூனிய வெளி
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே = பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் தோன்றியவளே...

இன்னொரு பாடலில்

"ஒன்றே பலவுருவே அருவே என் உமையவளே "

மேற்கண்ட என் கருத்தை எழுத்தாளர் சுஜாதாவிற்கு அவர் கற்றதும் பெற்றதும் நான்காவது பகுதி எழுதி வந்த போது அனுப்பி வைத்திருந்தேன் ..அதை அவர் தனது கட்டுரையில் என் பெயர் விலாசம் குறிப்பிட்டு பிரசுரித்திருந்தார் என்பதை அபிராமி பட்டரின் பெருமையாகவும், என் மகிழ்ச்சியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்


ராசீவ் மரணமும் விதியின் விளக்கமும்

விதியை நம்பும் அன்பர்களுக்கான் பதிவு இது அல்ல. ஆனால் விதியை நம்பாத மதியாளர்களுக்கு இந்த விஷயம் ஒரு இயல்பான நிகழ்வாகத் தோன்றினாலும் என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை? சரி விஷயத்திற்கு வருவோம்......

இந்திராகாந்தியின் புதல்வர்கள் இருவர். சஞ்சய்காந்தி மற்றும் ராசீவ்காந்தி...இதில் இந்திராவின் அரசியல் வாரிசாக ஒரு பெரும் சக்தியாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவர் சஞ்சய் . சராசரி குடும்பத்தலைவனாக வாழ்வை கழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ராசீவ்.

அரசியலில் அண்ணன் அழகிரி போல் அதிரடியான ஆளான சஞ்சய் காந்திக்கு பொது வாழ்வின் விதிப்படி எதிரிகள் அதிகம் உருவாகவும் அதன் மூலம் அவருக்கு மரணம் வாய்க்க கண்டிப்பாக பல சந்தர்ப்பங்கள் உண்டு. அதேபோல் ஆகாய விமானியாகப் பணியாற்றிய ராசீவிற்கு அவர் தொழிலில் உள்ள இயல்பான ஆபத்துகளின் படி ஆகாய விமான விபத்தில் உயிர்விட பல்வேறு வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பாருங்கள் அரசியல்வாதியாக இருந்த சஞ்சய் காந்தி ஆகாய விமான விபத்தில் மரணமடைகிறார்.... சம்பந்தமே இல்லாமல் அரசியல்வாதியான ஆகாய விமானி ராசீவ் காந்தி அரசியல் காரணங்களுக்காக உயிர்விடுகிறார்... இரண்டு பேர்களும் ஒரேகுடும்பத்தில் ....அதுவும் அண்ணன் தம்பிகள்....இதைத் தான் விதி என்பதோ....

சென்னை புத்தகக் கண்காட்சியில் சாக்கடை

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகளில் எத்தனையோ புத்தகங்கள். தமிழ்த்தாத்தா இருந்திருந்தால் ட்ரக்குகளில் புத்தக லோடு எடுத்திருப்பார். அரங்கத்தினுள் இருப்பது அறிவின் கருவூலம், தேடி வரும் வாசகர்களோ அறிவைக் கொள்முதல் செய்ய ஓடோடிவரும் ஆர்வத் திருவுருக்கள் . ஆனால் கூடப் பாருங்கள் அரங்கத்தை ஒட்டி அறிவுக்கு உணவோடு, வயிற்றுக்கும் ஈவதற்காக அமைக்கப்பட்டுள்ள உணவரங்கத்தில் தரம் நிறைவாக இருந்தது. விலை காலத்தின் கட்டாயத்தால் நுகர்வோரை சிலையாக்கினாலும், கூட்டத்திற்கும், விற்பனைக்கும் ஒரு குறைவும் இல்லை. எதற்கு இவ்வளவு நீட்டி முழக்குகிறேன் என்றால் , சாப்பிடு முன்னும் சாப்பிட்ட பின்னும் கை கழுவி வாய் கொப்பளிக்க வேண்டுமல்லவா, அட ஆண்டவனே , சமூகத்தில் ஒரு பிரச்சனை என்றால் வானுயர வார்த்தையால் குதிக்கும், பேனா என்ற லத்தியை சுழற்றும், சமூகக் காவலர்களான எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய விஷயமா அது? சாதாரண கல்யாண விருந்துகளில் கூட ஒரு தற்காலிக வாஷ்பேசின் வைத்து கழிவுநீரை முறையாய் வடிகால் செய்யும் காலம் இது. ஆனால் பாருங்கள் புத்தகக் கண்காட்சி பொறுப்பாளர்களோ, அதன் உறுப்பினர்களான பதிப்பகத்தார், எழுத்தாளர்கள் (ஆன்மீக அருளாளர்கள் மட்டும் ஐந்தாறு பேர்கள் இருக்கிறார்கள்) யாருமே கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அல்லது கவலைப்படாமல் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் படி , டிரம்களில் இருந்து நேரடியாக குவளை மூலமாகக் கழுவிக் கொட்டப்படும் கழிவுநீர், அங்கேயே தேங்கி ஒரு மினி கூவத்திற்கு இணையான தெய்வீகமணத்தை பரவச்செய்து அதைப்பற்றி கவலைப்படாமல் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் நூற்றுக்கணக்கானவர்களின் மரத்துப் போன உணர்ச்சிகளைப் பார்த்து மவுனமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நம்மால் மற்றவர்கள் போல் இருக்கமுடியவில்லை என்பதால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் "ஒ" போடும் எழுத்தாளர் ஞானி ஐயா அவர்களைப் பார்த்து " ஐயா ஊர் கூடி இலக்கியத்தேர் இழுக்கிறீர்கள் ஆனால் இந்த அவலத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றேன். அதை ஒப்புக்கொண்ட அவர் தானும் அதைக் கவனிப்பதாகவும் பாபாசி (கண்காட்சி நடத்துனர்) நிர்வாகிகளிடமும் புகார் செய்யவும் என்று கூறினார். அதன் படியே செய்துவிட்டு வந்தேன். அடுத்த சில நாட்களில் போய்ப் பார்த்தால் தெரியும் இவர்கள் மீதி சமூகப் பிரச்சனைகளில் காட்டும் அக்கறை உண்மையா இல்லையா என்று.