திரை உலகத் தில்லுமுல்லு

தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அரைக் கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உரிமத்தை உங்கள் பெயரில் அரசாங்கப் பதிவுத் துறையில் பதிவு செய்துகொண்டால் தான் அது உங்களது சட்டபூர்வமான சொத்தாக மாறும். நாளை நீங்கள் விற்கும் போது வாங்குபவர் வில்லங்கம் சரிபார்க்க விண்ணப்பித்தால் உங்கள் நிலத்தின் நூறு ஆண்டு ஜாதகமே அவர் கையில் இருக்கும். இதற்கென அரசாங்கத்தில் மந்திரி, செயலாளர், துறை, கலெக்டர், ஆர்.டி.ஒ, டீ.ஆர்.ஒ, தாசில்தார், வீ.எ.ஒ என்று ஒரு பெரிய அரசாங் வலைப் பின்னலே உண்டு

சரி பல கோடி முதலீடு செய்து எடுக்கப்படும் ஒரு திரைப் படத்தை தன உரிமையாக சொத்தாக athan தயாரிப்பாளர் எங்கே பதிவு செய்கிறார்? அரசாங்கத் துறையிலா? அல்லது அதற்கென்று அரசுப் பதிவுத்துறை இருக்கிறதா? ஒரு புண்ணாக்கும் இல்லை கோடம்பாக்கத்திலேயே இந்தத் திரைப்படங்களின் கடைசி நெகடிவ் மற்றும் பாசிடிவ் முடித்துத் தரும் லபரடரிஸ் எனப்படும் பிராசசிங் கூடங்களில் தான் பதிவு செய்யப்படுகின்றது. எப்படி இவர்களுக்கென்று ஒரு சட்டாம்பிள்ளை ஏற்பாடு பாருங்கள்.

படத்தின் பல்வேறு உரிமங்கள் (ஏரியா விநியோகம், பாடல் உரிமம், தொலைகாட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம், டப்பிங் உரிமம், சி.டீ, வீ.சீ.டீ, இணையதள உரிமம், கப்பல், விமான உரிமம் இத்தியாதி, இத்தியாதி.....) நீண்டகாலத்திற்கோ, குறைந்த காலத்திற்கோ பலருக்கு விற்கப்பட்டாலும் படத்தின் நெகடிவ் உரிமம் மூலத் தயாரிப்பாளரிடமே இருக்கும். சமயத்தில் அதுவும் விற்கப்படும்.

சரி இவர்கள் பிரச்சனைகளில் அன்னியத் தலையீடே இருக்கக் கூடாதென்று திரைத்துறையின் எல்லாப் பிரிவுகளுக்கும் வலுவான சங்கங்கள் அமைத்து ஏகபோக சர்வாதிகாரக் கோலோச்சும் இவர்களின் தயாரிப்பாளர் சங்கங்களில் இன்று வரை முதலீட்டாளராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வப்போது பதிவு செய்யும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் ஒன்று திருவோடு எந்தப் போயிருப்பார்கள் அல்லது வேறு எங்காவது ஓடிப் போயிருப்பார்கள் . மற்ற எல்லாத் துறைகளின் சங்க உறுப்பினர்களும் (நிரந்தர uruppinargalaaga, காணக் கிடைப்பவர்கலாக ) கோடம்பாக்கத்திலேயே பிறந்து அநேகமாக அங்கேயே வாழ்ந்து அங்கேயே முடிந்து போவது தான் வழக்கம். ஏனென்றால் இவர்களுக்குத் தான் முதலீடு என்ற ஒரு பிரச்சனையே இல்லையே.

இவர்கள் சட்ட பூர்வமான பதிவு முறையை ஏன் அரசாங்கத்திடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை? (நான் சொல்வது தயாரிப்பாளரின் சட்ட பூர்வமான சொத்தான திரைப்படத்தின் உரிமம் பற்றி) காரணம் இத்துறையில் தலை முதல் கால் வரையிலும் புழங்கும் கறுப்புப் பணம் தான். (வீடு மற்றும் நிலப்பதிவு முறைகளில் உங்கள் சொத்திற்கு வழிகாட்டு மதிப்புகள் இருக்கும் ஆனால் இங்கோ வழிகாட்டு மதிப்பு வீணாப் போன கதாநாயகர்களின் வரட்டுக் கவுரவம் தானே)

அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்தில் இத்துறையைச் சேர்ந்தவர்களே கோலோச்சுவதால் இவர்களால் நூறு வருடங்களாக நடந்து வரும் இந்த வசதியைப் பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.

சாட்டிலைட் தொலைக் காட்சிகள் வந்த புதிதில் பல அப்பாவி தயாரிப்பாளர்கள் கோடம்பாக்க மீடியேட்டர்கள் மூலமாக அதிகார வர்க்கத்தால் வளைத்து வளைத்து கடைசி மொட்டை அடிக்கப்பட்டதைப் பார்த்த வயிற்று எரிச்சல் தான் பல நாட்கள் கழித்து இந்தப் பதிவாக வெளிப்பட்டுள்ளது. யாராவது விரும்பினால் தொடர்ந்து இதைத் தொழில் நுட்ப ரீதியாக அலசத் தயார்.

சர்பாசி என்னும் சர்வாதிகாரச் சட்டம்

வங்கிகளில் கடன் வாங்கி(சொத்துக்களை அடமானம் vaiththu) தொழில் திட்டம் தொடங்கும் தொழில் முனைவோர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் திவாலாகும் பட்சத்தில் (என்.பீ.எ) அவர்களது கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களை வங்கிகளே விற்று தங்கள் கடன் தொகைகளை பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்கும் சட்டம் தான் சர்பாசி என்னும் பொருளாதாரச் சட்டம். தொழில் முனைவோர் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளில் தான் திவாலாகும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர் (சரியாகக் கையாளத் தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கத் தான் செய்கின்றனர்) சரி இந்த சட்டம் எப்படி சர்வாதிகார சட்டம் ஆகின்றது?

தன வாழ்க்கையையே அடமானம் வைத்து ஆபத்துக்களை எதிர்நோக்கி சவால்களைச் சமாளித்து சொத்துப் பத்துக்களை வங்கியிடம் கொடுத்து சமூகக் கடமையாக பலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில் முனைவோருக்கு இந்தச் சட்டம் தரும் பாதுகாப்பைப் பார்ப்போம். திவாலாகும் பட்சத்தில் கடனுக்கு ஈடான சொத்துக்களை விற்று வரும் வரும்படியில் அந்த நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி முதலில் தீர்க்கப்படும். வங்கியின் கடன், வட்டி, குட்டி எல்லாம் கணக்கிடப்பட்டு எடுத்துக்க் கொள்ளப்படும் . ஒருக்கால் ஏதாவது மீதம் இருந்தால் பாவப்பட்ட தொழில் முனைவோருக்கு பிரசாதம் வழங்கப்படும். இல்லை என்றால் அவர் ஒரு முழக் கயிறோ அல்லது ஒரு துளி விஷமோ, கடலோ, மலையோ பார்த்து கதையை முடித்துக் கொள்ளவேண்டியது தான். இல்லையென்றால் எம்.எஸ்.உதயமூர்த்தி, மணிமேகலைப் பிரசுர தன்முனைப்பு புத்தகங்களை கொஞ்ச காலம் படித்து விட்டு அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கலாம். வழியிருந்தால்..............

திரைத்துறையில் வர்த்தகம்

நான் பொதிகை அலைவரிசையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தபோது திரைத்துறையில் வர்த்தகம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்று நேயர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய வெறியை என்னுள் உருவாக்கிய சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.

இப்போது இலங்கையைப் பற்றி நிறையக் கதைக்கிறவர்கள் கி.பி இரண்டாயிரம் ஆண்டு வாக்கில் இலங்கையை வரைபடத்தில் பார்க்கக் கூட பயந்தவர்கள் தான் என்பது என் அபிபிராயம். அந்தக் காலகட்டங்களில் கொழும்புவின் ஒவ்வொரு சதுர அடியையும் கால் நடையாகவே சுற்றித் திரிந்து ஐ.தி.என், சுவர்ணவாகினி, ரூபவாகினி, தேசிய திரைப்படக் கழகம் போன்ற நிறுவனங்களுக்கு தமிழ் திரைப்படங்களின் அலைவரிசை ஒலிபரப்பு உரிமையை விற்றுக்கொண்டிருந்த நான் அதற்காக இங்கே சென்னையில் அது சம்பந்தமான காபி ரைட் உரிமையாளர்களை சந்திக்க எனக்கு உதவிசெய்தவர்களில் அண்ணன் மீடியேட்டர் சிவஞானம் அவர்கள் முக்கியமானவர். அப்படி அவரை என் பைக்கில் உட்காரவைத்து எப்.எம்.எஸ் யாகியா பாய் அவர்களை சந்திக்க சென்று கொண்டிருந்த சமயத்தில் சிவஞானம் அண்ணன் திடீரென்று "ஏண்டி முத்தம்மா எது புன்னகை" என்ற பாடலை உரக்கப் பாட ஆரம்பித்தார். (அண்ணன் சாயங்கால வேளைகளில் கொஞ்சம் சுருதி கூட்டுவது வழக்கம்) என்ன அண்ணே இன்னைக்கி சுருதி கொஞ்சம் ஓவரோ என்று சற்றே கிண்டலுடன் கேட்ட என்னை வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டச் சொன்ன அவர் ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு ஆரம்பித்தார். தம்பி கணேசு இந்தப் பாடு எந்தப் படம் என்றார். ஆறு புஷ்பங்கள் என்றேன் நான். அப்படிச் சொல்லாத தம்பி இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆறுபுஷ்பங்கள் என்று சொல்லு தம்பி என்றார். சரி அதுக்கு இப்போ என்ன என்றேன் சற்று எரிச்சலுடன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் தம்பி என்றார் உடைந்த குரலுடன். நான் சூழ்நிலையை மறந்து அங்கேயே அழ ஆரம்பித்து விட்டேன்.(padaththin தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால் endru பின்னர் உறுதி செய்துகொண்டேன், அண்ணன் சுருதியில் இருந்ததால் படத்தை மாற்றிச் சொன்னாரோ அல்லது பொய் சொன்னாரோ தெரியவில்லை எது எப்படியோ எனக்கு மிக முக்கியமான கடமையை தந்தார்)கோயம்புத்தூரில் விசைத்தறி நடத்திய அண்ணனை அங்கே சூட்டிங் நடத்த வந்த யாரோ இயக்குனர் பட ஆசை காட்டி சிங்காரச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். இங்கே வந்த அண்ணனோ திரைப்பட வியாபாரத்தைப் பற்றி ஒன்றுமே புரிஞ்சு கொள்ளாமல் பணம், வியாபாரம் எலாவற்றையும் தொலைத்துவிட்டு அதே சினிமாவில் அனைவரையும் அண்ணே அண்ணே என்று கைகூப்பி மீடியேட்டராக மாறி வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருககிறார் என்று புரிந்துகொண்டு அங்கேயே திரைத்துறையில் வர்த்தகம் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய என் கடமையை சூளுரைத்துக் கொண்டேன். அதற்காக திட்டமிட்டு கலைப்புலி சேகரன் அவர்களையும், மற்ற திரை வர்த்தக துறை வித்தகர்களையும் சந்தித்து பேட்டியெடுத்த என் மக்கள் மன்ற நிகழ்ச்சியான திரைத்துறையில் வர்த்தகம் எனக்கு பெரிய மன நிம்மதியையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

இசைஞானியின் திருப்பாவை

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் பாக்கியம் கிட்டிய போது என்னுடைய பேச்சின் ஊடே பரிமாறப்பட்ட கருத்துக்களினால் என் ஆன்மீக தேடல்களை கண்டுகொண்ட அந்த இசைச்சித்தர் திருப்பாவை பற்றிய அற்புதமான ஒரு விளக்கத்தை அளித்தார். என்னைச் சிலிர்க்க வைத்த அந்தக் கருத்தை உங்களுக்காகத் தருகிறேன். இனி ராஜாவின் வார்த்தைகளில்....

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" என்று தொடங்கும் முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான் " என்று பாவை நோன்புக்கான பறை என்ற நோன்பு கயிற்றினை நாராயணன் தருவான் என்று நம்பிக்கை தரும் ஸ்ரீ ஆண்டாள், கடைசியாக முடிக்கும் " சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்ற பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகான் கோவிந்தா எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாம் உமக்கே ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்" என்று முடிக்கிறார். அதாவது பறை என்ற நோன்புக்கயிற்றை எண்ணி நாங்கள் வரவில்லை, இனி எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் உன்னுடைய எண்ணம் அன்றி, உனக்கான கடமைகள் அன்றி வேறெதுவும் சிந்திக்காத வண்ணம் எம் சிந்தனையை மாற்றும் வரம் அருள்வாயாக என்று பக்தியின் சிகரத்தைத் தொடுகிறார்.