தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.

தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.



இந்தக் கட்டுரை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பற்றியது அல்ல. மேலும் இது எந்த மதங்களைப் பற்றிய விமர்சனமும் அல்ல. முழுக்க முழுக்க சூழ்நிலை மற்றும் காலத்தை பொறுத்த ஒரு அலசலே. (மதத்திற்கும் சாதிக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எமனாய் வந்த தந்தைப் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் ஒரு சிறிதும் அவமரியாதை செய்யும் நோக்கம் சத்தியமாக இல்லை)


வெள்ளைக்காரர்கள் காலத்தில் எல்லா துறைகளிலும் கோலோச்சியிருந்த பிராமணர்களின் வருணாசிரம தர்மத்திற்கு கட்டுப்பட்டு சமூகத்தில் பலவிதங்களில் இழிநிலையிலிருந்த பல சமூகத்தவரும் முதலில் மத ரீதியிலான அங்கீகாரமும் சமூக கௌரவமும் வேண்டி மிஷனரிகளின் அரவணைப்பின் கீழ் கிருத்துவ மதத்திற்கு மாறத் தொடங்கினர். இதே சமயத்தில் அவர்களுக்கு நாராயண குரு போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் மதரீதியிலான சமூக கௌரவமும், அங்கீகாரமும் பெறுவதற்கு போராடினாலும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் பெற முடியாத சூழல் நிலவிவந்தது. இந்த நிலையில் தான் அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காரும், தமிழகத்தில் சுயமரியாதை வேண்டி காங்கிரசிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் பெருவாரியான மக்களின் சமூக முன்னேற்றம், அரசியல் விடுதலை மற்றும் சுயமரியாதைக்ககப் போராடினார்கள் . தந்தை பெரியாரிடம் அரசியல் இலக்கணம் பயின்ற அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாயிலாக அரசியல் வெற்றி கண்டு சமூக நீதியை நிலைநாட்டும் பல சட்டங்களை கொண்டு வந்து பல சமூகத்தினரும் தத்தமது மதங்களிலேயே மரியாதையும் சமூக அங்கீகாரமும் பெறமுடியும் வழிவகை செய்து கொடுத்தனர். இதன் காரணமாக சமூக அங்கீகாரம் வேண்டி மதம் மாறும் முடிவில் இருந்த பல சாதிப் பிரிவினர் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். ஆக பெருவாரி மக்களை உள்ளடக்கி ஆனால் ஒரு சிறு பிரிவினரால் கட்டுப் படுத்தப் பட்டு வந்த இந்துமதம் தமிழகத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அடிப்படையில் பெரும் பாதிப்பிற்குள்ளாகாமல் காக்கப்பட்டது.

எது உண்மையான சென்னை ? ஏனிந்த மாயை?

ஆங்கிலேயர் காலத்திற்கு முன் பல சிறு கிராமங்களாக இருந்த சென்னப்பட்டினம்,  பல நூற்றாண்டுகளாக வியாபார நிமித்தமாகவும், அரசு நிர்வாக நிமித்தமாகவும் தற்போதைய சென்னையின் பாரிஸ் மற்றும் கோட்டைப் பகுதிகளை ஒட்டியே தலைமைப் பகுதியாக விளங்கி வந்தது, அதனை ஒட்டியே அந்தப் பகுதிகளைச் சுற்றி குடியிருப்புகள் பெருகின. தொழில்புரட்சியின் காரணமாக அம்பத்தூர், தாம்பரம் (ஸ்டாண்டர்ட்மோட்டார்,பின்னி,  கிரோம்பேட் தோல்  நிறுவனங்கள்) போன்ற 
பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு குடியிருப்புகள் பெருகத் தொடங்கின.  பின்னர் கணினித்  தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக ஈ.சீ.ஆர், ஒ.எம்.ஆர் போன்ற பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு புதிய குடியிருப்புகள் புற்றீசல்கள் போலக் கிளம்பி பெருகி வருகின்றன.  திருப்பெரும்புதூர் பகுதியில் ஆட்டோ தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் அந்தப் பகுதியை ஒட்டி பெரும் குடியிருப்புகள் பெருகிவிட்டன. இந்த நிலையில் உண்மையில் நிலமதிப்பின் அடிப்படையில் டிமான்ட் மற்றும் அதிக விலை உடைய  இடங்கள் என்பவை  எது தான்.  பரவலாக சென்னை  மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உண்மையிலேயே ஒரு சராசரி நிலமதிப்பு என்ன என்பது பற்றி விற்பன்னர்கள் யாராவது விளக்கமான பதிவு போட்டால் அவர்களுக்கு கோடி புண்ணியம் சேரும்.  ப்ளீஸ் யாராவது செய்யுங்களேன்.

"சாமியார் தம்பிக்குப் பிடி வாரண்ட்

(தலைப்பைப் பார்த்ததும் ஏதோ இப்போது நடந்த சமாச்சாரம் என்று நீங்கள் குழம்பிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல . இது தந்தைப் பெரியாரால் "என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்கள் புதியதல்ல எல்லாமே ரிப்பீட்டு தான் என்பது மட்டும் புரிகிறது.)






ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1908 ஆம் வருஷமாய் இருக்கலாம். எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷை (பிட்சை) நடத்துகிறார்கள் என் தகப்பனாரும் ரூபாய் 50 கொடுத்தார் . பெரிய சமாராதனை நடக்கிறது அந்தச்சாமியார் தம்பி ஒரு மைனர். கடன்காரன். அவனும் கூட வந்திருந்தான். அந்த மைனர் எங்கள் ஊரில் ஒரு வியாபாரிக்கு கடன் பாக்கி கொடுக்கவேண்டும். அது கோர்டில் டிக்ரி ஆகி இருந்தது அந்த சமயம் அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய் பிடி போட்டு வாரண்ட் கொண்டு வரச் சொன்னேன். உடனே நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு அன்றே வாரண்டு வந்தது. மறுநாள் பகல் மணிக்கு வாரண்டு எடுத்துக்கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூடிக்கொண்டு எங்கள் ஊரில் சாமியார் இறங்கியிருந்த "எல்லயப்பர் சத்திரம்" என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்திரத்திற்குப் பக்கத்தில் வெளியில் நான் நின்று கொண்டு சாமியார் தம்பிக்கு ஆள் அனுப்பினேன். உள்ளே இருந்து அவர் ரோட்டுக்கு வந்தார். சேவகனுக்குக் கைகாட்டி "இவர் தான்" என்று சொன்னேன். சாமியார் தம்பி, வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே போனேன். திமிறிவிட்டு சட்டென்று வீட்டுக்குள் புகுந்து வெளிக்கதவைத் தாழிட்டுக்கொண்டான். நான் உடனே தூணைப்பிடித்து தாழ்வாரத்தின் மீது ஏறி ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து வீதிக் கதவைத் திறந்து விட்டு சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து சேவகனிடம் ஒப்புவித்தேன். அந்த மைனர் திமிறினான். என் கடை ஆட்கள் சில பேர்கள் அங்கிருந்தவர்களை "இவனைப் பிடித்து வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள்" என்று சொன்னேன். (அற்புதமான நகைச்சுவை நடையில் இந்தக் கட்டுரையின் மற்ற விஷயங்களையும் அந்த மாமனிதரின் மற்ற மகத்துவம் பொருந்திய கருத்துக்களையும் வாங்கிப் படியுங்கள்)