இசைஞானியின் திருப்பாவை

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் பாக்கியம் கிட்டிய போது என்னுடைய பேச்சின் ஊடே பரிமாறப்பட்ட கருத்துக்களினால் என் ஆன்மீக தேடல்களை கண்டுகொண்ட அந்த இசைச்சித்தர் திருப்பாவை பற்றிய அற்புதமான ஒரு விளக்கத்தை அளித்தார். என்னைச் சிலிர்க்க வைத்த அந்தக் கருத்தை உங்களுக்காகத் தருகிறேன். இனி ராஜாவின் வார்த்தைகளில்....

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" என்று தொடங்கும் முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான் " என்று பாவை நோன்புக்கான பறை என்ற நோன்பு கயிற்றினை நாராயணன் தருவான் என்று நம்பிக்கை தரும் ஸ்ரீ ஆண்டாள், கடைசியாக முடிக்கும் " சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்ற பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகான் கோவிந்தா எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாம் உமக்கே ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்" என்று முடிக்கிறார். அதாவது பறை என்ற நோன்புக்கயிற்றை எண்ணி நாங்கள் வரவில்லை, இனி எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் உன்னுடைய எண்ணம் அன்றி, உனக்கான கடமைகள் அன்றி வேறெதுவும் சிந்திக்காத வண்ணம் எம் சிந்தனையை மாற்றும் வரம் அருள்வாயாக என்று பக்தியின் சிகரத்தைத் தொடுகிறார்.