எம்.எஸ்.வியின் ஹை-வே இசையும், கவியரசரின் கண்ணீர் வரிகளும்

நாற்பத்தியேழு நாட்கள் என்று ஒரு படம். அதிகம் படிப்பறிவில்லாத ஒரு அபலைப் பெண் ஏற்கனவே மணமான ஒரு வெளிநாடு வாழ் தமிழனால் ஏமாற்றி தாலி கட்டப் பட்டு பாரீசில் படாத பாடு பட்டு ஒரு நல்ல மனிதனால் காப்பாற்றப் பட்டு தமிழ் நாடு திரும்புவதாகக் கதை (சிவசங்கரியின் கதை). தான் ஏமாற்றப் பட்டதை முற்றிலும் புரிந்து கொண்டு பாரீசிலிருந்து எப்படியாவது தப்பி தமிழ் நாடு வந்து சேரவேண்டும் என்று வழி தெரியாமல் பாடாய்ப் படும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும் (மான் கண்ட சொர்க்கங்கள், காலம் போகப் போக யாவும் வெட்கங்களே). mellisai மன்னர் இசை அமைத்து கவியரசர் எழுதிய அந்தப் பாடல் இசையிலும் வரிகளிலும் காலத்தை வென்ற ஒரு படைப்பாகும். அந்தக் காலகட்டத்தில் தான் தாள வாத்தியக் கருவியான ரோட்டோ என்ற ஒரு ட்ரம்ஸ் வாத்தியக் கருவி அறிமுகமாகியிருந்தது. ஏழெட்டு வட்டவடிவமான ட்ரம்ஸ் கருவிகள் வரிசையாகப் பொருத்தப்பட்டு (இப்போதைய கம்ப்யூட்டர் ரிதம் பெடிற்கு மானுவல் thaththaa athu) anthak கருவியை மட்டும் தாள vaaththiyap பின்னணியாக வைத்து மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார் அந்தப் பாடலில். அனேக வெளிநாடு வாழ் தமிழர்கள் இப்போதும் அங்கே ஏதாவது ஹை வேக்களில் காரில் இந்தப் பாடலை ஓடவிட்டால் எப்படி ஐயா மெல்லிசைமன்னர் இப்படி ஒரு கருவி இசை இந்தப் பாடலுக்கு அமைத்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எழும். திக்குத் தெரியாமல் பாஷை தெரியாத வெளிநாட்டில் கலங்கித் தவிக்கும் அபலைப் பெண்ணின் மனவோட்டமாக வரும் அந்தப் பாடலில் கண்களை கண்ணீர்க் கடலில் மூழ்கடிக்கும் ஒரு வரியை எழுதியிருப்பார் கவியரசர். "தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது" என்ற அந்த வரியில் நமது கள்ளமில்லாத் தாய்மார்கள் தமது குழந்தைகளுடன் கோவிலுக்குச் செல்வதும் அவர்களுக்கு சாமி கதைகளைச் சொல்லி பிரச்சனைகள் வரும் போது நம் குலதெய்வத்தை மனத்தால் கூப்பிடு உதவிக்கு ஓடிவரும் என்று நம்பிக்கை ஊட்டுவதும் நம் கண் முன்னே வரும். நான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபப் பட்டதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ததில்லை. ஆனாலும் இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் அவர்கள் நினைவு என் நெஞ்சை அழுத்தி கண்களில் கண்ணீர் தெறிக்கும் என்பது மட்டும் உண்மை.

திரை உலகத் தில்லுமுல்லு

தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அரைக் கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உரிமத்தை உங்கள் பெயரில் அரசாங்கப் பதிவுத் துறையில் பதிவு செய்துகொண்டால் தான் அது உங்களது சட்டபூர்வமான சொத்தாக மாறும். நாளை நீங்கள் விற்கும் போது வாங்குபவர் வில்லங்கம் சரிபார்க்க விண்ணப்பித்தால் உங்கள் நிலத்தின் நூறு ஆண்டு ஜாதகமே அவர் கையில் இருக்கும். இதற்கென அரசாங்கத்தில் மந்திரி, செயலாளர், துறை, கலெக்டர், ஆர்.டி.ஒ, டீ.ஆர்.ஒ, தாசில்தார், வீ.எ.ஒ என்று ஒரு பெரிய அரசாங் வலைப் பின்னலே உண்டு

சரி பல கோடி முதலீடு செய்து எடுக்கப்படும் ஒரு திரைப் படத்தை தன உரிமையாக சொத்தாக athan தயாரிப்பாளர் எங்கே பதிவு செய்கிறார்? அரசாங்கத் துறையிலா? அல்லது அதற்கென்று அரசுப் பதிவுத்துறை இருக்கிறதா? ஒரு புண்ணாக்கும் இல்லை கோடம்பாக்கத்திலேயே இந்தத் திரைப்படங்களின் கடைசி நெகடிவ் மற்றும் பாசிடிவ் முடித்துத் தரும் லபரடரிஸ் எனப்படும் பிராசசிங் கூடங்களில் தான் பதிவு செய்யப்படுகின்றது. எப்படி இவர்களுக்கென்று ஒரு சட்டாம்பிள்ளை ஏற்பாடு பாருங்கள்.

படத்தின் பல்வேறு உரிமங்கள் (ஏரியா விநியோகம், பாடல் உரிமம், தொலைகாட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம், டப்பிங் உரிமம், சி.டீ, வீ.சீ.டீ, இணையதள உரிமம், கப்பல், விமான உரிமம் இத்தியாதி, இத்தியாதி.....) நீண்டகாலத்திற்கோ, குறைந்த காலத்திற்கோ பலருக்கு விற்கப்பட்டாலும் படத்தின் நெகடிவ் உரிமம் மூலத் தயாரிப்பாளரிடமே இருக்கும். சமயத்தில் அதுவும் விற்கப்படும்.

சரி இவர்கள் பிரச்சனைகளில் அன்னியத் தலையீடே இருக்கக் கூடாதென்று திரைத்துறையின் எல்லாப் பிரிவுகளுக்கும் வலுவான சங்கங்கள் அமைத்து ஏகபோக சர்வாதிகாரக் கோலோச்சும் இவர்களின் தயாரிப்பாளர் சங்கங்களில் இன்று வரை முதலீட்டாளராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வப்போது பதிவு செய்யும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் ஒன்று திருவோடு எந்தப் போயிருப்பார்கள் அல்லது வேறு எங்காவது ஓடிப் போயிருப்பார்கள் . மற்ற எல்லாத் துறைகளின் சங்க உறுப்பினர்களும் (நிரந்தர uruppinargalaaga, காணக் கிடைப்பவர்கலாக ) கோடம்பாக்கத்திலேயே பிறந்து அநேகமாக அங்கேயே வாழ்ந்து அங்கேயே முடிந்து போவது தான் வழக்கம். ஏனென்றால் இவர்களுக்குத் தான் முதலீடு என்ற ஒரு பிரச்சனையே இல்லையே.

இவர்கள் சட்ட பூர்வமான பதிவு முறையை ஏன் அரசாங்கத்திடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை? (நான் சொல்வது தயாரிப்பாளரின் சட்ட பூர்வமான சொத்தான திரைப்படத்தின் உரிமம் பற்றி) காரணம் இத்துறையில் தலை முதல் கால் வரையிலும் புழங்கும் கறுப்புப் பணம் தான். (வீடு மற்றும் நிலப்பதிவு முறைகளில் உங்கள் சொத்திற்கு வழிகாட்டு மதிப்புகள் இருக்கும் ஆனால் இங்கோ வழிகாட்டு மதிப்பு வீணாப் போன கதாநாயகர்களின் வரட்டுக் கவுரவம் தானே)

அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்தில் இத்துறையைச் சேர்ந்தவர்களே கோலோச்சுவதால் இவர்களால் நூறு வருடங்களாக நடந்து வரும் இந்த வசதியைப் பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.

சாட்டிலைட் தொலைக் காட்சிகள் வந்த புதிதில் பல அப்பாவி தயாரிப்பாளர்கள் கோடம்பாக்க மீடியேட்டர்கள் மூலமாக அதிகார வர்க்கத்தால் வளைத்து வளைத்து கடைசி மொட்டை அடிக்கப்பட்டதைப் பார்த்த வயிற்று எரிச்சல் தான் பல நாட்கள் கழித்து இந்தப் பதிவாக வெளிப்பட்டுள்ளது. யாராவது விரும்பினால் தொடர்ந்து இதைத் தொழில் நுட்ப ரீதியாக அலசத் தயார்.

சர்பாசி என்னும் சர்வாதிகாரச் சட்டம்

வங்கிகளில் கடன் வாங்கி(சொத்துக்களை அடமானம் vaiththu) தொழில் திட்டம் தொடங்கும் தொழில் முனைவோர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் திவாலாகும் பட்சத்தில் (என்.பீ.எ) அவர்களது கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களை வங்கிகளே விற்று தங்கள் கடன் தொகைகளை பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்கும் சட்டம் தான் சர்பாசி என்னும் பொருளாதாரச் சட்டம். தொழில் முனைவோர் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளில் தான் திவாலாகும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர் (சரியாகக் கையாளத் தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கத் தான் செய்கின்றனர்) சரி இந்த சட்டம் எப்படி சர்வாதிகார சட்டம் ஆகின்றது?

தன வாழ்க்கையையே அடமானம் வைத்து ஆபத்துக்களை எதிர்நோக்கி சவால்களைச் சமாளித்து சொத்துப் பத்துக்களை வங்கியிடம் கொடுத்து சமூகக் கடமையாக பலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில் முனைவோருக்கு இந்தச் சட்டம் தரும் பாதுகாப்பைப் பார்ப்போம். திவாலாகும் பட்சத்தில் கடனுக்கு ஈடான சொத்துக்களை விற்று வரும் வரும்படியில் அந்த நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி முதலில் தீர்க்கப்படும். வங்கியின் கடன், வட்டி, குட்டி எல்லாம் கணக்கிடப்பட்டு எடுத்துக்க் கொள்ளப்படும் . ஒருக்கால் ஏதாவது மீதம் இருந்தால் பாவப்பட்ட தொழில் முனைவோருக்கு பிரசாதம் வழங்கப்படும். இல்லை என்றால் அவர் ஒரு முழக் கயிறோ அல்லது ஒரு துளி விஷமோ, கடலோ, மலையோ பார்த்து கதையை முடித்துக் கொள்ளவேண்டியது தான். இல்லையென்றால் எம்.எஸ்.உதயமூர்த்தி, மணிமேகலைப் பிரசுர தன்முனைப்பு புத்தகங்களை கொஞ்ச காலம் படித்து விட்டு அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கலாம். வழியிருந்தால்..............

திரைத்துறையில் வர்த்தகம்

நான் பொதிகை அலைவரிசையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தபோது திரைத்துறையில் வர்த்தகம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்று நேயர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய வெறியை என்னுள் உருவாக்கிய சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.

இப்போது இலங்கையைப் பற்றி நிறையக் கதைக்கிறவர்கள் கி.பி இரண்டாயிரம் ஆண்டு வாக்கில் இலங்கையை வரைபடத்தில் பார்க்கக் கூட பயந்தவர்கள் தான் என்பது என் அபிபிராயம். அந்தக் காலகட்டங்களில் கொழும்புவின் ஒவ்வொரு சதுர அடியையும் கால் நடையாகவே சுற்றித் திரிந்து ஐ.தி.என், சுவர்ணவாகினி, ரூபவாகினி, தேசிய திரைப்படக் கழகம் போன்ற நிறுவனங்களுக்கு தமிழ் திரைப்படங்களின் அலைவரிசை ஒலிபரப்பு உரிமையை விற்றுக்கொண்டிருந்த நான் அதற்காக இங்கே சென்னையில் அது சம்பந்தமான காபி ரைட் உரிமையாளர்களை சந்திக்க எனக்கு உதவிசெய்தவர்களில் அண்ணன் மீடியேட்டர் சிவஞானம் அவர்கள் முக்கியமானவர். அப்படி அவரை என் பைக்கில் உட்காரவைத்து எப்.எம்.எஸ் யாகியா பாய் அவர்களை சந்திக்க சென்று கொண்டிருந்த சமயத்தில் சிவஞானம் அண்ணன் திடீரென்று "ஏண்டி முத்தம்மா எது புன்னகை" என்ற பாடலை உரக்கப் பாட ஆரம்பித்தார். (அண்ணன் சாயங்கால வேளைகளில் கொஞ்சம் சுருதி கூட்டுவது வழக்கம்) என்ன அண்ணே இன்னைக்கி சுருதி கொஞ்சம் ஓவரோ என்று சற்றே கிண்டலுடன் கேட்ட என்னை வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டச் சொன்ன அவர் ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு ஆரம்பித்தார். தம்பி கணேசு இந்தப் பாடு எந்தப் படம் என்றார். ஆறு புஷ்பங்கள் என்றேன் நான். அப்படிச் சொல்லாத தம்பி இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆறுபுஷ்பங்கள் என்று சொல்லு தம்பி என்றார். சரி அதுக்கு இப்போ என்ன என்றேன் சற்று எரிச்சலுடன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் தம்பி என்றார் உடைந்த குரலுடன். நான் சூழ்நிலையை மறந்து அங்கேயே அழ ஆரம்பித்து விட்டேன்.(padaththin தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால் endru பின்னர் உறுதி செய்துகொண்டேன், அண்ணன் சுருதியில் இருந்ததால் படத்தை மாற்றிச் சொன்னாரோ அல்லது பொய் சொன்னாரோ தெரியவில்லை எது எப்படியோ எனக்கு மிக முக்கியமான கடமையை தந்தார்)கோயம்புத்தூரில் விசைத்தறி நடத்திய அண்ணனை அங்கே சூட்டிங் நடத்த வந்த யாரோ இயக்குனர் பட ஆசை காட்டி சிங்காரச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். இங்கே வந்த அண்ணனோ திரைப்பட வியாபாரத்தைப் பற்றி ஒன்றுமே புரிஞ்சு கொள்ளாமல் பணம், வியாபாரம் எலாவற்றையும் தொலைத்துவிட்டு அதே சினிமாவில் அனைவரையும் அண்ணே அண்ணே என்று கைகூப்பி மீடியேட்டராக மாறி வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருககிறார் என்று புரிந்துகொண்டு அங்கேயே திரைத்துறையில் வர்த்தகம் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய என் கடமையை சூளுரைத்துக் கொண்டேன். அதற்காக திட்டமிட்டு கலைப்புலி சேகரன் அவர்களையும், மற்ற திரை வர்த்தக துறை வித்தகர்களையும் சந்தித்து பேட்டியெடுத்த என் மக்கள் மன்ற நிகழ்ச்சியான திரைத்துறையில் வர்த்தகம் எனக்கு பெரிய மன நிம்மதியையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

இசைஞானியின் திருப்பாவை

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் பாக்கியம் கிட்டிய போது என்னுடைய பேச்சின் ஊடே பரிமாறப்பட்ட கருத்துக்களினால் என் ஆன்மீக தேடல்களை கண்டுகொண்ட அந்த இசைச்சித்தர் திருப்பாவை பற்றிய அற்புதமான ஒரு விளக்கத்தை அளித்தார். என்னைச் சிலிர்க்க வைத்த அந்தக் கருத்தை உங்களுக்காகத் தருகிறேன். இனி ராஜாவின் வார்த்தைகளில்....

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" என்று தொடங்கும் முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான் " என்று பாவை நோன்புக்கான பறை என்ற நோன்பு கயிற்றினை நாராயணன் தருவான் என்று நம்பிக்கை தரும் ஸ்ரீ ஆண்டாள், கடைசியாக முடிக்கும் " சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்ற பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகான் கோவிந்தா எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாம் உமக்கே ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்" என்று முடிக்கிறார். அதாவது பறை என்ற நோன்புக்கயிற்றை எண்ணி நாங்கள் வரவில்லை, இனி எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் உன்னுடைய எண்ணம் அன்றி, உனக்கான கடமைகள் அன்றி வேறெதுவும் சிந்திக்காத வண்ணம் எம் சிந்தனையை மாற்றும் வரம் அருள்வாயாக என்று பக்தியின் சிகரத்தைத் தொடுகிறார்.

சுவிஸ் வங்கிகள் திவாலானால் அரசியல்வாதிகள் என்ன ஆவார்கள்?

நெருப்பு என்றால் நாக்கு வெந்து விடுமா என்று கேட்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாக்கு என்ன உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வெந்து போய்விடும் போலிருக்கிறது.. அதுவும் அமெரிக்காவின் லேஹ்மான் பிரதர்ஸ், எ.என்.ஜி போன்றவை ஒரே இரவில் திவாலான விஷயங்களையும்..நம்மூர் சத்யம் ராஜுஅடித்த ஊழல் செஞ்சுரி போன்ற விஷயங்களையும் நினைத்தால் பொருளாதார உலகில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது.....

நமக்கு மட்டும் அடித்துக் கொண்டால் போதுமா.. அனைவரையும் ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பிரஷர் எகிரட்டுமே என்ற நல்லெண்ணத்தினால் இந்தக் கற்பனைக் கட்டுரை.....

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எத்தனை ஆழத்திற்கு வேர்விட்டிருக்கிறது என்பது இன்னும் உறுதிபடத் தெரியாத நிலையில் ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்தத்தாக்குதல் மிக அதிக அளவில் இருந்து அதைத் தாக்குப் பிடிக்க கறுப்புப் பணங்கள் கோடிக்கணக்கான பில்லியன் டாலர்கள் அளவில் போட்டுவைக்கப் பட்டிருக்கும் வங்கிகள் மற்றும் அது போன்ற பிற முதலீட்டு நிறுவனங்கள் இரவோடிரவாக திவால் நோடீஸ் கொடுத்துவிட்டு ஜூட் விட்டால் அவற்றில் பல ஆயிரம் கோடிக் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் இந்திய பண முதலைகள் என்ன செய்வார்கள்?..திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்காது?

குறிப்பாக துட்டு அடிக்கவே அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடிகளை அங்கே பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்?.... யாரிடம் போய் பஞ்சாயத்துப் பண்ணுவார்கள்?...இது போன்ற சூழ்நிலையில் சட்ட ரீதியான அணுகுமுறைகள் ஏதாவது இருக்கிறதா?..அப்படியே இருந்தாலும் கள்ளத் துட்டிற்கு எங்கே போய் கேஸ் போடுவார்கள்?...எப்படி இந்திய அரசை நடவடிக்கை எடுக்க வைப்பார்கள்?..உங்களில் யாருக்காவது இதற்கான தகவல்கள் இருக்கிறதா?.....ஊதற சங்கை ஊதிட்டேன்...நடந்தப்புறம் நம்மைச் சபித்து பயன் இல்லை!!!!

சென்னையில் பதிவர்கள் சந்திப்பு

நான் வலைப்பதிவுலகில் நுழைந்தே நான்கு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் கூட தொடர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன் (பின்னூட்டங்கள் கிடைக்காவிட்டால் கூட!!) . பதிவர்கள் சந்திப்பிற்காக கிழக்கு பதிப்பக மாடியில் நுழைந்தபோது கோவி.கண்ணன் வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பத்ரி, லக்கிலுக், டாக்டர் ப்ரூனோ , நரசிம் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

வட்டவடிவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தன. பேச்சு முதலில் ராதாகிருஷ்ணனின் நாடக அனுபவங்களில் இருந்து தொடங்கியது. நாடகம் வழக்கொழிந்து கொண்டிருப்பதற்கான காரணத்தை அலசியபோது...நாடகங்களை திரைப்படங்களாக எடுத்தது ஒரு காலம்...பின்னால் வந்த பாரதிராஜா போன்றவர்கள் திரைப்படங்களை கிராமங்களுக்கே கொண்டு சென்று இயல்பாக திரைப்படம் எடுக்கும் வித்தையைக் காட்டத் தொடங்கியபின் திரைப்படத்தில் கூட சம்பிரதாயமாக வரும் காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்ட விதம் ரசிகர்கள் எந்த அளவிற்கு நாடகங்களை விட்டு விலகிப் போய்விட்டார்கள் என்பதற்கு சாட்சி என்று என் கருத்தை சொன்னேன்.

பேச்சு சுனாமி பற்றி திரும்பியது. பத்ரி சுனாமி தகவல் கிடைத்தவுடன் போட்டது போட்டபடி அவர்களுக்கு மருத்துவ சேவை செய்ய ஓடிய மருத்துவர்களை பாராட்டினார்.

வாசகர் கோவில்பட்டி அருண் தன் வேலை நேற்றே முடிந்துபோய்க் கூட இந்த சந்திப்பிற்காக சென்னையில் இருந்திருக்கிறார்...செல்போன் தயாரிப்பில் நோக்கியாவையும் உள்ளே விட்டு.... சீனத் தயாரிப்புகளையும் மார்க்கெட்டில் குவிக்கும் வியாபார விளையாட்டுகளை விலாவாரியாக கிழித்துப் போட்டார். லட்சுமி, பாலபாரதி அவர் கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை....

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்த முறை (செலவுக்கு நிறைய காசு இருந்து கூட) சரியாக விளம்பரம் செய்யவில்லை என்று பத்ரி குறைப்பட்டார்...அதிஷா சாக்லேட் விநியோகம் செய்தார் (நல்ல பாரின் சாக்லேட், வாயில் கரைந்தது) குளிர்பானங்களும் விநியோகிக்கப்பட்டது..

சென்னை சங்கமம் பற்றிய விவாதத்தில் சென்னை கர்நாடக இசை விழாக்களைப் போல இந்த கிராமிய விழாவிற்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெரும் அளவில் ஸ்பொன்சர் செய்ய வேண்டும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன்..

இஸ்மாயில் சுனாமி முன்னெச்சரிக்கை முறை பற்றியும், மத நல்லிணக்கத்தைப் பற்றியும் நியாயமான கவலைப்பட்டார்....கொஞ்சம் இஸ்ரேல் விவகாரமும் சீண்டிப் பார்க்கப்பட்டது...

பாக் டு ஸ்கொயர் ஒன் என்பது போல் திரைப்பட விவாதம் தொடங்கியது.. இயக்குனர் சண்முகப்பிரியன், கேபிள் ஷங்கர், அக்கிநிப்பார்வை, வெண்பூ, அசன் அலி போன்றவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள்..என்னுடைய கொழும்பு திரைப்பட வர்த்தக அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன்...

சந்திப்பு இனிதே நிறைவுற அனைவரும் எல்டாம்ஸ் தெரு முனையில் தேநீர் பருகினோம்..புரூனோ சத்யம் ராஜுவின் கேப்மாறித் தனங்களைப் புட்டு வைத்தார்... அனைவரும் கை குலுக்கி விடைபெற்றோம்...மனத்துக்கு ஆனந்தமும், நிம்மதியும் தந்த அருமையான சந்திப்பு...அனைவருக்கும் நன்றி.....
(நண்பர்கள் நிறைய புகைப்படம் எடுத்தார்கள்...அவர்களது வலைப்பக்கங்களில் பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன்)